ஒட்டன்சத்திரம்: மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடுக்கு, கவர்னர் கையெழுத்திட்டது எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்இடஒதுக்கீட்டுக்கான அரசாணையில் கவர்னர் கையெழுத்திட்டுள்ளது எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதனைத் தவிர்த்து உண்மைக்கு புறம்பாக அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்று கூறுவது மிகவும் கண்டனத்திற்குரியது. புதுச்சேரியில் காங். முதல்வர் நாராயணசாமி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணையை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்தே அதிமுக, தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அரசாணையை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.