புதுடெல்லி: உலகத்திலேயே மிகவும் குறைந்த அளவாக, இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் சதவீதம் 1.5 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நடந்த, கொரோனா தொற்றின் நிலவரம் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
* கடந்த 24 மணி நேரத்தில் 48,648 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 81,37,119 ஆக உயர்ந்திருக்கிறது.
* பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 74 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் சராசரி 91.34 சதவிகிதமாக நீடிக்கிறது.
* கொரோனாவால் நேற்று உயிரிழந்த 551 பேருடன், இந்தியாவில் மொத்த பலி எண்ணிக்கை 1,21,641 ஆக அதிகரித்துள்ளது.
* உயிரிழப்பு விகிதம் 1.49 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது, உலகத்திலேயே மிகவும் குறைவானது.
* தற்போது, 5,82,649 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 6-வது நாளாக சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்துக்கும் குறைவாக இருந்து வருகிறது.
* மத்திய அமைச்சர் குடும்பத்தில் மனைவி, 6 பேருக்கு தொற்று
உத்தர பிரதேசத்தில் உள்ள பரேலி நாடாளுமன்ற தொகுதி எம்பி.யும். மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சருமான சந்தோஷ் கங்வாரின் மனைவி, அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. ‘சமீபத்தில் குடும்பத்துடன் அனைவரும் டெல்லி சென்று வந்தோம். இதனால், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். தற்போது, அனைவரும் பரிதாபாத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பரிசோதனை செய்ததில் எனக்கு கொரோனா இல்லை’ என்று கங்வார் கூறியுள்ளார்.