மூதாட்டிகள் கவனத்தை திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் சிக்கினர்

சென்னை: வடசென்னையில் சமீபகாலமாக ஷேர் ஆட்டோ, பேருந்து மற்றும் தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகள், பெண்களை வழிமறித்து, ‘‘உங்களது செயின் அறுந்து உள்ளது அல்லது செயின் கொக்கி விலகி உள்ளது. அதை கழற்றி பையில் வைத்து எடுத்து செல்லுங்கள்’’, எனக்கூறி, அவர்களுக்கு உதவுவது போல் நடித்து, நூதன முறையில் நகையை பெண்கள் சிலர் அபேஸ் செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் சமீபத்தில் 3 பெண்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர்கள் மீண்டும் தங்களது கைவரிசையை காட்டி வந்தனர்.

கடந்த 20ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் முனியம்மாள் (70), திருவொற்றியூரில் உள்ள தனது வீட்டிற்கு பேருந்தில் சென்றபோது, அவரிடம் இந்த 3 பெண்கள் நூதன முறையில் 2 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். புகாரின்பேரில், பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிந்து, செயின் பறித்த 3 பெண்களை நேற்று பேசின்பிரிட்ஜ் மேம்பாலம் அருகே மடக்கி பிடித்தனர் விசாரணையில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லட்சுமி (40), உஷா (34), இசக்கியம்மாள் (27) என்பது தெரியவந்தது. இவர்கள், வட சென்னையின் பல பகுதிகளில் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: