×

பேரவை வளாகத்துக்கு வாங்கிய ரூ.12 கோடி மைக் மாயம்: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை:  அரசினர் பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள பேரவை வளாகத்தில் ₹12 கோடியில் வாங்கப்பட்ட மைக் காணாமல் போய் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் திமுக ஆட்சி காலத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. ஆனால், 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கு தலைமை செயலகம் மாற்றப்பட்டன. தொடர்ந்து, ஓமந்தூரரில் இருந்த புதிய தலைமை செயலக கட்டிடம் அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டன. ஆனால், அந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த பேரவை வளாகத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற முடியாது என்பதால், அந்த இடம் மட்டும் மூடப்பட்டன. மருத்துவ கவுன்சலிங் நடைபெறும் போது மட்டும் அந்த வளாகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், புதிய தலைமை செயலக கட்டிடத்தில் பேரவை வளாகத்துக்காக ₹12 கோடி செலவில் வாங்கப்பட்ட மைக், ஓலிப்பெருக்கிகள் மற்றும் இருக்கைகள் பயன்பாடின்றி கிடந்தது. இதை பயன்படுத்தி கொண்ட சிலர் மைக், ஒலிப்பெருக்கிகளை விற்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்தது. இக்கூட்டதொடருக்காக ஓமந்தூரர் அரசினர் மருத்துவமனையில் இருந்த பேரவை வளாகத்தில் உள்ள மைக், ஓலிப்பெருக்கிகளை எடுத்து செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், மருத்துவமனையில் உள்ள பேரவை வளாகத்தில் ஒலி பெருக்கி மற்றும் மைக் காணாமல் போனது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, கலைவாணர் அரங்கத்திற்கு புதிதாக மைக், ஒலி பெருக்கிகள் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தினார். அப்போது, பேரவை வளாகத்தில் இருந்த மைக், ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தாமல் இருந்ததால் வீணாகி போய் விட்டதாக ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். ஆனால், உண்மையில் மைக், ஒலி பெருக்கிகளை பல கோடிக்கு விற்பனை செய்து இருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Assembly premises, Rs 12 crore, mic, magic
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...