திருப்பதியில் சமூக இடைவெளியின்றி இலவச தரிசன டிக்கெட் வாங்க குவியும் பக்தர்கள்: ஆன்லைனில் வழங்க கோரிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் 3ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக திருப்பதி அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மையத்தில் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 3ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதால், இதை ெபற ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். காலை 6மணிக்கு கவுன்டர்கள் திறக்கப்பட்டு டிக்கெட் வழங்கப்படுகிறது. ஆனால் பக்தர்கள் முதல்நாள் இரவே கவுன்ட்டர் முன் வரிசையில் காத்திருக்கின்றனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் முக கவசம் இன்றியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் உள்ளனர்.

இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. பலர் கைக்குழந்தைகளுடன் கடும் பனியில் தவிக்கின்றனர். இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு வருகின்றனர். ஒரு நாளைக்கு 3ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதால் ெவளியூர்களில் பக்தர்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ரூ.300 டிக்கெட் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. அதேபோல் கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும், வெளியூர் பக்தர்களின் வசதிக்காகவும் இலவச தரிசன டிக்கெட்களையும் ஆன்லைன் மூலம் வழங்க தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: