சுசீந்திரம்: பறக்கை அருகே கோழிப்பண்ணையில் புகுந்த மர்ம விலங்கு சுமார் 800 கோழிகளை கடித்து குதறி கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பறக்கை அருகே பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஸ். இவர் அந்த பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இங்கு சுமார் 1500 கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் இன்று காலை சதீஸ் பண்ணைக்கு சென்று கோழிகளுக்கு உணவு வழங்க சென்றனர். அப்போது சுமார் 800 ேகாழிகள் கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். நேற்று நள்ளிரவு பண்ணைக்குள் மர்ம விலங்கு புகுந்து கோழிகளை கடித்து குதறி கொன்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சதீஸ் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தனர். தொடர்ந்து மர்ம விலங்கின் கால் தடம் பதிந்து கிடக்கிறதா? என்று சோதனை செய்தனர். மேலும் உண்மையில் மர்ம விலங்கு புகுந்து கோழிகளை கடித்து கொன்றதா? அல்லது தெருநாய்கள் பண்ணைக்குள் புகுந்து கோழிகளை கொன்றதா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.