கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனைசாவடியில் 1.5 டன் செம்மரக்கட்டைகள் கடத்தி சென்ற மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக தினமும் ஆந்திரா, பீகார், ஒரிசா, மகாராஷ்டிரா, டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் செல்லும். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக ஆந்திராவிலிருந்து கார், இருசக்கர வாகனங்களில் கஞ்சா,செம்மரக்கட்டைகள் தொடர்ந்து கடத்தி வருவதாக புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின்பேரில் சிப்காட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் உள்ளிட்ட காவலர்கள் எளாவூர் சோதனைச்சாவடியில் நேற்று காலை முதல் மாலை முழுவதும் கார், இருசக்கர வாகனங்களை ஒவ்வொன்றாக தீவிரமாக சோதனை நடத்தினர்.