ஆவடி: விசா, பாஸ்போர்ட் இல்லாமல் ஆவடி அருகே தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்த வங்கதேச நாட்டை சேர்ந்த வாலிபரை மத்திய உளவுத்துறை போலீசார் கைது செய்தனர். மேலும், இவர், தீவிரவாத செயலில் ஈடுபட வந்தாரா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு கிராமத்தில் வங்கதேச நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் தங்கியிருப்பதாக சென்னையில் உள்ள மத்திய உளவுத்துறை போலீசாருக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சில வாலிபர்களை பிடித்தனர். தீவிர விசாரணையில், ஒருவர் வங்கதேச நாட்டைச் சேர்ந்த பாட்சா (22) என்பது தெரியவந்தது. பின்னர், உளவுத்துறை போலீசார் அவரை ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.