ராமநாதபுரம்: அதிமுக அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் செயல்படுத்தியே தீரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியாக கொண்டாடப்படும். இதன்படி, பசும்பொன்னில் தேவர் இன்று 30-ம் தேதி முத்துராமலிங்க தேவரின் 58-வது குருபூஜை மற்றும் 113-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் மலர் வளையம் வைத்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோரும் தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சாதிய பாகுபாடுகளை கடுமையாக எதிரித்தவர் முத்துராமலிங்க தேவர். அரசு இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி சுதந்திர வேட்கையை விதைத்தவர். வாழ்நாளில் 4,000 நாட்களை சிறையில் கழித்தவர்.
அதிமுக அரசு அரசு முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது. மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு அறிவித்து நிறைவேற்றி உள்ளது. உள்ஒதுக்கீடு விவகாரத்தில், ஆளுநரின் ஒப்புதலுக்கு தாமதமானதாலேயே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் உணர்வுகளை மதித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 7.5% உள்ஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சில செய்யும் அரசியல் எடுபடாது. அதிமுக அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் செயல்படுத்தியே தீரும், என்றார்.