டெல்லி : பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில் உள்ள நோட்ரே டாம் தேவாலயத்தின் அருகே நடந்த கத்தி குத்து சம்பவத்தில் பெண் ஒருவர் உள்பட 3 பேர் பலியாகினர். இதில் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க சென்ற பலரும் காயமடைந்தனர்.இந்த படுகொலைகள் குறித்து பிரான்ஸ் தீவிரவாத ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலைகளுக்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை.இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பு, கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நைஸ் நகரத்தின் தேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதல் உட்பட பிரான்ஸ் நாட்டில் அண்மையில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நைஸ் நகரத்தின் தேவாலயத்தில் நடைபெற்ற கொடூரத் தாக்குதல் உட்பட அண்மையில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். பிரான்ஸ் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், பிரான்சுடன் இந்தியா துணை நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார்.