சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகவின் தொடர் போராட்டம் காரணமாக, 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட, உடனடியாக கவுன்சலிங் தேதிகளை அறிவித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதிமுக அரசு - தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி - பாஜவுடன் கூட்டணியாக உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்குப் பதில் - இப்போது அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால், இந்த உத்தரவை 45 நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருக்கலாம். இந்த அரசாணை சரியா தவறா - அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பொது விவாதம் இப்போது தொடங்கி விட்டது. இதற்கிடையில் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆளுநரின் ஆணைப்படி என்று வெளியிட்டிருப்பது - வழக்கமான நிர்வாக நடைமுறையா அல்லது ஆளுநரிடம் அந்தக் கோப்பில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை.