கோவை: தேஜ கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்துதான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என பா.ஜ. மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கூறினார். கோவையில் நேற்று அவர் அளித்த பேட்டி: மனுதர்மம் என்பது பெண்களை இழிவுபடுத்துகின்றது. பா.ஜ. மனுதர்மத்தை பின்பற்றுகின்றதா? என்று விடுதலை சிறுத்தைகள் உட்பட அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்கின்றனர். ஏதோ நூலில் யாரோ சொல்வதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. திருமாவளவன் அரசியலுக்காக மனுதர்ம நூலை வைத்து பேசுகிறார். பெண்கள் குறித்து காலத்திற்கு ஒவ்வாமல் எழுதி வைத்து இருப்பது பெண்களுக்கு தேவையில்லை. பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரமாக நடமாடுவதற்கு சமுதாயம், பாதுகாப்பு போன்றவையே தேவை.