கோவை: கோவை ராமநாதபுரம் அருகே நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் சாமுவேல் ஜெய்சங்கர் (39). இவர் திறன் மேம்பாட்டு பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி வழங்கியதாக தெரிகிறது. கடந்த 2011ல் கோவை போத்தனூரில் ஒரு பள்ளியில் திறன் பயிற்சி வழங்க சென்றார். அப்போது அங்கே 8ம் வகுப்பு படித்த 13 வயது மாணவியிடம் செல்ேபான் நம்பரை வாங்கி அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தார். கடந்த 2016 வரை சாமுவேல் ஜெய்சங்கர் மாணவிக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். தற்போது அந்த மாணவி கல்லூரி இறுதியாண்டு படித்து வருகிறார். சாமுவேல் ஜெய்சங்கரின் நடவடிக்கையால் அதிர்ச்சியில் இருந்த மாணவி நேற்று முன்தினம் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தில் சாமுவேல் ஜெய்சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.