புதுடெல்லி: ெகாரோனா பரவல் காரணமாக முடங்கிய தொழில்துறைகள் இன்னும் மீள முடியவில்லை. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்துக்கான உற்பத்தி விவரங்களை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. நிலக்கரி, உரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு ஆலைகள், ஸ்டீல், சிமென்ட், மின்சார உற்பத்தி ஆகியவை முக்கிய 8 துறைகளாகக் கருதப்படுகின்றன. இந்த ஆண்டில் உற்பத்தி சரிவுக்கு, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் சிமெண்ட் உற்பத்தி சரிவே முக்கிய காரணம். கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்த உற்பத்தி 14.9 சதவீதம் சரிந்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது 1.3 சதவீதம் வளர்ச்சி பெற்றிருந்தது.
கச்சா எண்ணெய் 6%, இயற்கை எரிவாயு, 10.6 சதவீதம், சுத்திகரிப்பு பொருட்கள் 9.5 சதவீதம், உரம் 0.3 சதவீதம், சிமென்ட் 3.5 சதவீதம் உற்பத்தி சரிவை சந்தித்துள்ளன. அதேநேரத்தில், நிலக்கரி 21.2 சதவீதம், ஸ்டீல் 0.9 சதவீதம் மற்றும் மின் உற்பத்தி 3.7 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிலக்கரி (3.6%), உரம் (7.3%) உயர்ந்துள்ளது. ஸ்டீல் (6.3%), சுத்திகரிப்பு (19.1%), சிமெண்ட் (14.6%), இயற்கை எரிவாயு (9.5%), கச்சா எண்ணெய் (6.3%), மின் உற்பத்தி (2.7%) சரிந்தன.