பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 102 சவரன் நகை 8 லட்சம் மோசடி: பெண் கைது

துரைப்பாக்கம்: நீலாங்கரை அடுத்த பாலவாக்கம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (42). இவரது வீட்டின் முன்பு, அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்பவரின் தாயார் நாராயணி (45), அடிக்கடி புலம்பியபடி இருந்துள்ளார்.இதுபற்றி சிவகுமார் கேட்டபோது, ‘‘உனது வீட்டில் ஏவல், பில்லி, சூனியம் வைக்கப்பட்டுள்ளது. இதை அப்படியே விட்டால் உயிர் பலி வாங்கும். எனவே, இதை போக்க, வீட்டில் உள்ள நகை, பணத்தை வைத்து 45 நாள் பரிகாரம் செய்ய வேண்டும், என்று கூறியுள்ளார். இதை நம்பிய சிவகுமார், 102 சவரன் நகை மற்றும்  8 லட்சத்து 75 ஆயிரத்தை நாராயணியிடம் கொடுத்துள்ளார். 45 நாள் கழித்து, சிவகுமார் தனது நகை, பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது, 365 நாள் வரை பூஜை செய்ததால் தான் பரிகாரம் முடியும். இல்லை என்றால் உனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நாராயணி கூறியுள்ளார்.

இதை ஏற்காத சிவகுமார், நகை, பணத்தை கேட்டு தொல்லை செய்ததால், நாராயணி  தலைமறைவானார். இதுகுறித்து நீலாங்கரை போலீசில் சிவகுமார் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து நாராயணியை தேடி வந்தனர். இந்த நிலையில்  பெரும்பாக்கத்தில் பதுங்கி இருந்த நாராயணியை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்  சிறையில் அடைத்தனர்.

Related Stories: