×

அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்தின் போது நரம்பு துண்டித்து பச்சிளம் பெண்குழந்தை பரிதாப பலி: டாக்டர்கள் மீது போலீசில் புகார்

பெரம்பூர்: அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்தின் போது மூளைக்கு செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டு பச்சிளம் பெண் குழந்தை இறந்தது. அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை கோரி தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சென்னை ஓட்டேரி ஈடன் கார்டன் குக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (25). மயிலாப்பூரில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், லட்சுமி என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லட்சுமிக்கு கடந்த 21ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால், புளியந்தோப்பு அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்று காலை 10.30 மணிக்கு லட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு முகம் சற்று வீக்கமாக இருந்ததுடன், நீண்ட நேரம் அழாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அங்கிருந்த மருத்துவர்களிடம் பிரசாந்த் கேட்டபோது, குழந்தையை உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறி உள்ளனர்.

அதன்படி, குழந்தையை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை 2 மணி அளவில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது.  இதுகுறித்து பிரசாந்த் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் விசாரித்தபோது, பிரசவத்தின் போது குழந்தையின் மூளைக்கு செல்லும் நரம்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அதிர்ச்சியடைந்த பிரசாந்த், புளியந்தோப்பில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி பிரசாந்த் நேற்று புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதில், பிரசவத்தின்போது அலட்சியமாக செயல்பட்டு, எனது குழந்தை இறப்பதற்கு காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார்.

சிறுவன் மயங்கி விழுந்து சாவு  
ஆதம்பாக்கம் கக்கன் நகர் பிரதான சாலையை சேர்ந்த அன்பழகன் மகன் ரோஷன் (17), அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் விளையாடிய இச்சிறுவன் திடீரென மயங்கி விழுந்தான். அவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், வழியிலேயே சிறுவன் இறந்தான். இச்சிறுவனுக்கு கடந்த ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்து, பேஸ்மேக்கர் கருவி பொருத்தி உள்ளனர். இதன் காரணமாக சிறுவன் இறந்தானா என்ற கோணத்தில் ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Government maternity hospital ,infant girl ,childbirth ,doctors , Government Maternity Hospital Baby girl dies after nerve rupture during childbirth: Doctors report to police
× RELATED ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு...