ஆவடி அருகே கஞ்சா செடி வளர்த்து விற்ற வாலிபர் கைது: 1.5 கிலோ பறிமுதல்

ஆவடி: ஆவடியை அடுத்த வெள்ளானூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து, எஸ்.ஐ விமலநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு பைக்கில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமாக செடிகளை வைத்து கொண்டு வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து, போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவரது பாக்கெட்டில் ஒரு கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

 பின்னர், அவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும், அவர் வைத்திருந்த செடி, கொடிகளை கஞ்சா செடிகள் என ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, போலீசார் அவரிடம் கஞ்சா செடிகள் வளர்க்கும் இடத்தை காட்டுமாறு கூறியுள்ளனர். பின்னர், போலீசார் அவர் கூறிய கோவில்பதாகை ஏரிக்கரை ஓரமாக வளர்த்து வந்த அரை கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். பின்னர்,  போலீசார் நடத்திய விசாரணையில்  அவர் வெள்ளானூர், 4வது தெருவைச் சார்ந்த மணிகண்டன் (26) என்பது தெரியவந்தது.

 இதற்கிடையில், பறிமுதல் செய்த செடிகளின் மாதிரியை சோதனை செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை  நேற்று மாலை கைது செய்தனர். பின்னர், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: