ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு நேரத்தில் முன்பதிவு செய்த டிக்கெட் இருந்தால் விரும்பும் நேரத்தில் தரிசனம்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு நேரத்தில் முன்பதிவு செய்த டிக்கெட் பெற்ற பக்தர்கள் வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், ஆன்லைன், அஞ்சலகம், இ-தரிசன கவுண்டர்கள் மூலம் 300 ரூபாய் சிறப்பு தரிசனம் மற்றும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனமும் ரத்து செய்யப்பட்டது.

தங்கும் விடுதிகள் முன்பதிவும் ரத்து செய்யப்பட்டது. தரிசன டிக்கெட்களை பக்தர்கள் ரத்து செய்தால், அவர்களின் முன்பணம் திரும்ப வழங்குவதாக தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இணையதளத்தின் மூலம் டிக்கெட் ரத்து செய்யும்படி கேட்கும் பக்தர்களுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் பணம் திருப்பி அளிக்கப்படும். ஆனால் டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பாத பக்தர்கள் அந்த டிக்கெட் வைத்து எப்போது வேண்டுமானாலும் அதனை காண்பித்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் நேற்று அறிவித்தது.

மேலும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயில் டைரி மற்றும் காலண்டர்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் தபால் மூலம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories: