மருத்துவ படிப்பில் 7.5 % உள்ஒதுக்கீடு..!! சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர தாமதமானதால் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசு அனுப்பிய சட்ட மசோதா மீது முடிவு எடுக்க மேலும் 4 வார காலம் பிடிக்கும் என்று ஆளுநர் கூறியிருந்தார். நீட் தேர்வினால் அரசுப்பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததை அடுத்து, அவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்பட்டு அனைவரும் ஒப்புதல் அளித்ததை அடுத்து மசோதாவானது.

அதனைத் தொடர்ந்து மசோதா சட்டமாக ஆளுநரின் ஒப்புதல் தேவை என்பதால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அனுப்பிவைத்து 45 நாட்களாகியும் இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இதனிடையே அமைச்சர்கள், முதலமைச்சர் என தமிழக அரசு சார்பில் பலமுறை ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதற்கு பதில் அளித்த ஆளுநர் மசோதா குறித்து முடிவெடுக்க மூன்று முதல் நான்கு வாரங்கள் அவகாசம் தேவை என்று கூறியிருந்தார். இந்நிலையில் 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories: