அகர்தலா: திரிபுரா மாநிலம் கோவாய் அடுத்த பெல்சேரா கிராமத்தை சேர்ந்த சவுமென் சந்தல் (30) என்பவர் உடல் காயங்களுடன் அகர்தலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ‘ஆசிட்’ (திராவகம்) தாக்குதலில் காயம் அடைந்து மூக்கு, கண் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவரது சகோதரர், தனது அண்ணனின் (சவுமென் சந்தல்) பெண் தோழியான பினட்டா சந்தல் (27) என்பவர் திராவகம் வீசியதாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் பினட்டாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘இருவரும் கடந்த 8 ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டாக சவுமென் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இருவரும் பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்த நிலையில், பிளஸ் 2 படித்த பின்பு மேற்படிப்பு படிக்க சிரமப்பட்ட சவுமென் சந்தலை இந்த பெண் படிக்க வைத்துள்ளார். 8ம் வகுப்பு மட்டும் படித்த பினட்டா, பல இடங்களில் பாத்திரம் தேய்த்து, கூலி வேலை செய்து பணம் அனுப்பி காதலனை படிக்க வைத்தார். 2018ல் பட்டப்படிப்பை முடித்த சவுமென், வேலைக்கு சேர்ந்ததும் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்.
அவர் வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதையும் அறிந்து ஆத்திரமடைந்த பினட்டா, தனது காதலன் மீது திராவகம் வீசினாள். தற்போது கைது செய்யப்பட்ட பினட்டா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்’ என்றனர்.