விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: அறை இடிந்து தரைமட்டமானது

சிவகாசி: விருதுநகர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை ஒன்று இடிந்து தரைமட்டமானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை துலுக்கன்குறிச்சி கிராமத்தில் உள்ளது. 20 அறைகளை கொண்ட இந்த பட்டாசு ஆலையில் நூறுக்கும் மேற்பட் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் அறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மருந்து கலவையில் திடீரென உராய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அந்த அறை தரைமட்டமானது. தகவலறிந்து வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ பிற இடங்களுக்கு பரவ விடாமல் தடுத்து அணைத்தனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். காலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories: