மதுரை: அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது. நடப்பாண்டு நீட் தேர்வு தேர்வு முடிவுகளும் வெளியாகிய நிலையில், உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. 7.5 % உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் தேவை தேவை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, “7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படி நீதிமன்றத்திற்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் மனசாட்சியுடன் நடக்க வேண்டும். பல ஆலோசனைக்குப் பிறகே சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். ஏழை எளிய மருத்துவ மாணவர்களின் நலனை கருத்தில் கொள்வதும் அவசியமானது. பிற மாநிலங்களில் நீட் முடிவு வெளியான பின்பு என்ன நிலை உள்ளது. கர்நாடகாவில் இதுபோல அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா என்பதை அரசு வழக்கறிஞர்கள் உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கின் விசாரணையை இன்று மாலை ஒத்திவைத்தனர்.
தொடர்ந்து, அரசு வழக்கறிஞர்கள், கர்நாடகா மாநிலத்தில் கிராமப்புற மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இரண்டிற்கு மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. கன்னட மொழியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கூடுதலாக 5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதனையடுத்து நீதிபதி, 300 முதல் 400 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம். இந்த ஆண்டே 7.5% உள்ஒதுக்கீடு அமலானால் 300 மாணவர்கள் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும். இருப்பினும், உள்ஒதுக்கீடு விவகாரத்தில் திங்கட்கிழமை நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.