சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தலைமையில் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது உள்ள ஊரடங்கு வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதியுடன் முடிவு பெறும் நிலையில், அடுத்த மாதம் ஊரடங்கு குறித்தும் தளர்வுகள் குறித்தும் தமிழக முதல்வர் ஆலோசனை ஈடுபட உள்ளார்.
மேலும், 2020 - 2021 கல்வி கல்வி ஆண்டுக்கான பள்ளிகள், கல்லூரிகள் இதுவரை இன்னும் தமிழகத்தில் திறக்கவில்லை. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக நவம்பர் முதல் வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்துகிறது. தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். பள்ளிகள் திறப்பதில் உள்ள சிக்கல்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.