தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களில் 25 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!!

சென்னை : தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 25 தொடர் சுற்றுப்புறக் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களை (Continuous Ambient Air Quality Monitoring Stations) முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாட்டில் முக்கிய நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகள் உள்ள 28 இடங்களில் தேசிய காற்று மண்டலக் கண்காணிப்பு (National Ambient Air Quality Monitoring Programme) திட்டத்தின் கீழ், வாரத்தில் இரண்டு நாட்கள் காற்று மாதிரி சேகரிப்பு செய்து காற்றின் தரத்தினைக் கண்காணித்து வருகின்றது.

இது தவிர சுற்றுப்புறக் காற்றின் தன்மையைத் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 5 இடங்களிலும், கும்மிடிப்பூண்டி, கோயம்புத்தூர், பெருந்துறை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் தலா ஒரு தொடர் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களும் (Continuous Ambient Air Quality Monitoring Stations) இயங்கி வருகின்றன. இதில் பதிவாகும் புள்ளிவிவரங்களைக் கொண்டு காற்றின் தரக் குறியீடு (Air Quality Index) கணக்கிடப்பட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

இத்திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 27 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் மிகவும் நகரமயமானதும், தொழிற்சாலைகள் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழகம் விளங்குகிறது. காற்று மாசுபடுவதற்கு முக்கியக் காரணியாக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகை உள்ளது.

எனவே காற்றின் தன்மையை நகர மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் கண்காணிப்பது மற்றும் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகிறது. எனவே, காற்றின் தன்மையை தொடர்ச்சியாக உடனுக்குடன் கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள நகரம் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் 25 இடங்களில் தொடர் காற்று கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், சேலம், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 25 இடங்களில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள சுற்றுப்புற காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்நிலையங்களில், காற்றில் கலந்துள்ள மாசு காரணிகள் 10 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள நுண்துகள்கள் ((PM10), 2.5 மைக்ரான் அளவிற்குக் கீழ் உள்ள நுண்துகள்கள் ((PM2.5), சல்பர்-டை-ஆக்ஸைடு ((SO2), நைட்ரஜன்-டை-ஆக்ஸைடு ((NO2), அம்மோனியா ((NH3), ஓசோன் (c3), கார்பன் மோனாக்சைடு (CO) மற்றும் பென்சின், டெலுவின், ஜைலின் ஆகியவற்றின் அளவுகள் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒருமுறை தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு, இப்புள்ளி விவரங்கள் ‘6/4’ அளவிலான மின்னணு காட்சிப் பலகையில் ((Electronic Display Board) பொதுமக்களின் பார்வைக்காகத் தொடர்ந்து காட்சிப்படுத்தப்படும். இப்புள்ளி விவரங்களைக் கொண்டு காற்றுத் தன்மை குறியீடு (Air Quality Index) கணக்கிடப்பட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், இந்நிலையங்களிலிருந்து பெறப்படும் புள்ளி விவரங்கள் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அந்தந்த மாவட்டங்களின் அருகிலுள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி, காற்றுத் தரக் குறியீட்டினை எட்டாத நகரங்களுக்கு ((Non-attainment cities)) காற்று மாசு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கொள்கை முடிவு எடுக்கவும், திட்ட அறிக்கை தயாரித்துச் செயல்படுத்தவும், புதிய தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்வதற்கும் இப்புள்ளி விவரங்கள் பயன்படுத்தப்படும்.

மேற்படி 25 தொடர் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள் செயல்படத் தொடங்கியதன் மூலம் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் தொடர் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையம் கொண்ட வாரியமாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திகழ்ந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், தலைமைச் செயலாளர் சண்முகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் ஏ.வி. வெங்கடாசலம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: