அந்தியூர்: அந்தியூர் அடுத்த ஆப்பக்கூடல் கவுந்தப்பாடி செல்லும் ரோட்டில், தண்ணீர் டேங்க் அருகே முனியப்பன் கோயில் வீதியில் 200 ஆண்டுகள் பழமையான பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் சாமி கிராம தேவதையாக ஆப்பக்கூடல், புதுப்பாளையம், கரட்டுப்பாளையம், நாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்த மக்களுக்கு தொய்வமாக விளங்கி வந்ததுள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம்.
கடந்த 50 வருடங்களுக்கு முன்பு திருவிழா நடத்தப்பட்டு, அதன் பின்னர் நீண்ட வருடங்களாக இக்கோயில் திருவிழா நடத்தப்படாமலேயே இருந்துள்ளது. பின்னர் ஊர் பொதுமக்கள் ஒன்றாக இணைந்து கடந்த 2009ல், திருவிழா நடத்தினர். அதுவே இறுதியாக நடத்தப்பட்ட திருவிழாவாக மாறியது. அதனையடுத்து பழமை வாய்ந்த இக்கோயில் சிதலமடையத் துவங்கியது. இதனை புனரமைப்பு செய்து மீண்டும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திருவிழா நடத்திவிடலாம் என்று முயற்சி செய்து அதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்களில் நீண்ட வருவடங்களாக நாடி வருகின்றனர்.
ஆனால் இதுவரை எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. பழமை வாய்ந்த கோயில் பாழடைந்த நிலையில் உள்ளதால் தற்போது அக்கோவிலில் மணல்மேட்டில் கட்டியுள்ளதால் நாளடைவில் கோயிலின் பின்புறப்பகுதி அப்படியே மணலுக்குள் புதைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அதிகாரிகளின் மெத்தனத்தால் மணலுக்குள் புதைந்து வரும் கோவில், இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் இக்கோவிலை ஆய்வு செய்வதற்காக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சுற்றுச்சுழல்துறை அமைச்சர் கருப்பணன் உள்ளிட்டோர் சென்றனர். பழமையான கோயிலை புனரமைப்பு செய்து திருவிழா கொண்டாட வேண்டும் என பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அதைச்சார்ந்தவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.