புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள்.. தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர் : நீதிபதிகள் காரசார கருத்து

மதுரை : தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளதற்கு யார் காரணம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எழுப்பியுள்ளது. திருச்சி கிருஷ்ணசமுத்திரத்தைச் சேர்ந்த கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு முறையான ஊதியம் இல்லை என்றும் கொரோனா காலத்தில் உரிய ஊதியம் வழங்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவ்வளவு பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தர அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தான் காரணமா ?. மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுவதற்கு அனுமதி வழங்கியவர்கள் தான் காரணம்.  இது போன்ற பிரச்சனைகளை களைய தேவைகேற்ப கல்லூரிகளை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர். தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கத்தை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைக்கிறோம், என்றனர்.

Related Stories: