அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்கலாம்: யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..!

சென்னை: அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என யுஜிசி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு, இறுதிப்பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத் தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுபோல, அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் தரப்பில் இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு கவுன்சிலின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது.

அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு ஆதரவாக வழக்கு தொடரும் மாணவர்களின் மொத்த அரியர் எண்ணிக்கை குறித்தும், 10-ம் வகுப்பு முதல் அவர்களின் கல்வி விவரங்கள் பற்றியும் கேட்கப்படும். தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் எனக் கேள்வி எழுப்பிய நிலையில் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில்,  அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என யுஜிசி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை வைக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: