பெரம்பூர்: விழுப்புரம் மாவட்டம் ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன்(26). கடந்த 3 வருடத்திற்கு முன்பு பெரம்பூர் சீனிவாசா ஆச்சாரி தெருவில் நண்பர்களுடன் ரூம் எடுத்து தங்கி சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வசூல் வேலை செய்து வந்தார். இவர் செல்போனில் அதிக நேரம் செலவிட்டு கேம்களை டவுன்லோட் செய்து விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஆயுதபூஜை விடுமுறையையொட்டி அவரது அறையில் தங்கியிருந்த நண்பர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அப்போது இவரையும் சொந்த ஊருக்கு செல்லுமாறு கூறினர். ஆனால் இவர் சொந்த ஊருக்கு செல்ல விரும்பவில்லை. ஆன்லைன் ரம்மி மூலம் நிறைய பணத்தை இழந்து விட்டதாக நண்பரிடம் கூறி தொடர்ந்து தனது அறையிலேயே தனியாக இருந்து வந்துள்ளார்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அவரது செல்போன் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருந்தது. ஆனால் குமரேசன் செல்போனை எடுக்கவில்லை. இதனால் பக்கத்து அறையில் இருந்த இவரது நண்பர்கள் ராஜசேகர் மற்றும் பாரதிராஜா வந்து குமரேசன் அறையை பார்த்தபோது குமரேசன் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவலின்பேரில் செம்பியம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமரேசனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.