பெரம்பூர்: கொடுங்கையூர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு கஞ்சா புகைத்த ஒரு இளைஞரை கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஆப்ரகாம் குரூஸ் விசாரித்தார். அதில் தான் கஞ்சா புகைப்பது இல்லை என அந்த சிறுவன் கூறினான். ஆனால் தொடர்ந்து அவனது பேச்சிலும் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவனிடம் போலீசார் துருவித் துருவி விசாரித்ததில் வலி நிவாரண மாத்திரைகளை உட்கொண்டதை ஒப்புக்கொண்டான். இதனையடுத்து, அந்த சிறுவனை வைத்து அந்த மெடிக்கல் ஷாப் கடையை கண்டுபிடிக்கும் பணியில் கொடுங்கையூர் போலீசார் இறங்கினர். அதன்படி நேற்று முன்தினம் அந்த சிறுவனிடம் பணத்தை கொடுத்து கொடுங்கையூர் போலீசார் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வருமாறு கூறினர்.
அந்த சிறுவன் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5வது மெயின் ரோட்டில் உள்ள அந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று 5 மதிப்புள்ள ஒரு மாத்திரையை 700 கொடுத்து வாங்கி வந்தான். அதன்பிறகு மறைந்திருந்த போலீசார் அதிரடியாக கடைக்குள் சென்று சோதனையிட்டதில் அளவுக்கு அதிகமாக வலி நிவாரண மாத்திரைகளை அவர் கடையில் வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடையில் இருந்து 170 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 25க்கும் மேற்பட்ட வலி நிவாரண மருந்துகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருபவர் செங்குன்றம் சோலையம்மன் நகரை சேர்ந்த மோகன்(30) என்பதும் இவர் மருத்துவரின் ஒப்புதல் சீட்டு இல்லாமல் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் மருந்துகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, மோகனை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் பெரும்பாலும் பெண்களின் பிரசவ வலிக்கு பயன்படுத்தப்படும் என்றும் அதிகப்படியான வலியை தாங்கிக் கொள்வதற்காக பயன்படுத்தும் மருந்துகளை போதைக்காக தவறாக சில இளைஞர்கள் பயன்படுத்துவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.