சென்னை: சென்னையில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது எப்படி என ஆய்வு செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் தலைமை பூச்சி தடுப்பு அலுவலர் செல்வகுமார் கூறியதாவது: சென்னையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவான அளவே கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தலா 15 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்படி சென்னையில் டெங்கு பாதிப்பு ஏன் இவ்வளவு குறைந்து என்பது தொடர்பாக ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீடு மற்றும் சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்திருந்தனர். இதனால் கொசு வளர்வது தடுக்கப்பட்டது. குறிப்பாக கட்டுமான இடங்களில் பணி நடைபெறவில்லை. மேலும் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது வந்தது. இது போன்ற பல காரணங்கள் உள்ளது. எனவே இது தொடர்பான காரணத்தை கண்டறிய விரைவில் ஆய்வு நடத்தப்படவுள்ளது.