‘ஓவர் சவுண்ட்’ வைத்து பாடல் போட்டதால் டெல்லியில் இளைஞர் அடித்துக் கொலை

புதுடெல்லி: டெல்லியில் மஹேந்திரா பார்க் பகுதியில் சுஷில் (29) என்பவர் தனது சகோதரர்களான சுனில் மற்றும் அனில் என்பவர்களுடன் வசித்து வந்திருக்கிறார். அவரது வீட்டிற்கு அருகில் அப்துல் சாட்டர் என்பவரும் வசித்து வருகிறார். பூண்டு வியாபாரியான சாட்டர்ஜிக்கு ஷானாவஸ், ஆஃபாக், சந்த் மற்றும் ஹசீன் என்ற 4 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று சாட்டர்ஜி வீட்டில் அளவுக்கு அதிகமாக சத்தம் வைத்து பாடலை ஒலிக்க விட்டிருக்கின்றனர். அருகிலிருப்பவர்களுக்கு தொந்தரவாக இருப்பதாகக் கூறிய சுஷில் மற்றும் சகோதரர்களுக்கும், சாட்டர் குடும்பத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது.  

வாக்குவாதம் அதிகமாகி அடிதடி வரை சென்றதால் மாலை 3.15 மணியளவில் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இந்த சண்டையில் பலத்த காயமடைந்த சுஷில், சுனில் மற்றும் அனில் மூவரையும் போலீசார் மீட்டு பாபு ஜக்ஜிவான் ராம் நினைவு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுஷில் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து சாட்டர் குடும்பத்தாரிடம் விசாரித்ததில், சண்டையில் சாட்டரின் மனைவி ஷாஜகானுக்கு அடிப்பட்டது தெரியவந்துள்ளது. இவ்விவகாரத்தில், சாட்டர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் சான்வாஸ், ஆஃபாக் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: