இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு; அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் வீட்டில் இருந்தபடி பங்கேற்கலாம்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு

திருமலை: கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி நடைபெற்ற குங்கும அர்ச்சனையில் பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பங்கேற்றனர். இந்த முறைக்கு பக்தர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் ஏழுமலையான் கோயிலில் கல்யாண உற்சவ சேவையும் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. இதில் வீட்டில் இருந்தபடியே பக்தர்கள் சம்பிரதாய உடை அணிந்து, அர்ச்சகர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு 90 நாட்களுக்குள் ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்படி ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல்சேவை, சகஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட சேவைகளிலும் ஆன்லைன் மூலம் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. நவம்பர் மாதம் முதல் இந்த சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்கலாம். ஆனால் இந்த டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம் கிடையாது என்பதால், இந்த சேவையில் பங்கேற்க நினைக்கும் பக்தர்கள் தனியாக ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பின்னரே ஏழுமலையானை தரிசிக்க முடியும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: