பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்...!! பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவு

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சம்பத்தில் அறிவிக்கப்பட்ட பதவிகளில் , தமிழகத்தில் இருந்து யாருக்கும் தேசிய அளவில் பதவிகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், பாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசனை நியமனம் செய்து கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். பாஜக கட்சியின் துணைத் தலைவர்கள், தேசியச் செயலாளர்கள், தேசிய பொதுச் செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து, அவர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.

அதில், தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர்கள் ஒருவரின் பெயர் கூட இடம்பெறாதது அக்கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறாதது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம் பெறாதது தனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை என்றார். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் முகாமிட்டிருந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.

அப்போது, பாஜகவின் தேசிய நிர்வாகிகளின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இடம் அளிக்காதது தொடர்பாக ஜே.பி.நட்டாவிடம் முருகன் பேசியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பாஜக மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசனை நியமனம் செய்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, வானதி சீனிவாசன் உள்லிட்ட 10 பேரை தமிழக பாஜக துணைத் தலைவராக எல்.முருகன் நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: