தனது உயிருக்கு ஆபத்து: தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதால் கொலை மிரட்டல் வருவதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்..!!

சென்னை: தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், முதலமைச்சர் உதவ வேண்டும், அவசரம் என வேண்டுகோள் விடுத்தது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர், தமிழில் தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும், தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்தை இயக்கி வருகிறார்.

மேலும், அவர் தெரிவித்ததாவது: நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல, தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதால்  தமக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் விரைவில் செய்தியாளர்களை சந்திக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி ட்விட் செய்ததை அடுத்து, இது தொடர்பாக போலீசார் தரப்பில் சீனு ராமசாமி, பாதுகாப்பு கேட்டு அல்லது புகார் ஏதேனும் அளித்துள்ளாரா என்ற கேள்விக்கு இதுவரை புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர் ஏதேனும் ஆபத்தில் சிக்கியுள்ளாரா? என்பதை கண்டறிய சீனு ராமசாமி வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். குறிப்பாக அவர் போரூரில் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது. என்ன காரணத்திற்காக உயிருக்கு ஆபத்து என பதிவிட்டார் என்பது குறித்து அவரது நண்பர்கள் சுற்று வட்டாரங்களிடம் விசாரணை செய்து வருகிறது. மேலும், சீனு ராமசாமியை தொடர்புகொள்ள முடியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அவர் முதல்வரிடம் உதவி கேட்டதை அடுத்து, அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கி இருக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் அவரை சந்தித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

Related Stories: