×

இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாதது.. கேரளத்தில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை... அசத்திய முதல்வர் பினராய் விஜயன்!!

திருவனந்தபுரம்: விவசாயிகள் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. கேரளத்தில் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யும் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் பினராயி விஜயன்,

இந்த குறைந்தபட்ச விலை, உற்பத்தி விலையைவிட 20 சதவீதம் அதிகமாக இருக்கும். சந்தை விலை சரிந்தாலும் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச விலையிலேயே கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம், காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயித்த நாட்டின் முதல் மாநிலமாக கேரளம் உள்ளது.நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும். இந்த திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், ஏனெனில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விநியோகிப்பதை ஒருங்கிணைப்பார்கள்.

குறைந்தபட்ச விலையின் பயனைப் பெறுவதற்காக பயிர் காப்பீடு செய்த பின்னர் விவசாயிகள் விவசாயத் துறையின் பதிவு தளத்தில் பதிவு செய்யலாம். குளிர் சேமிப்பு வசதிகள் மற்றும் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கான குளிரூட்டப்பட்ட வாகனங்கள் போன்ற முழு விநியோகச் சங்கிலி செயல்முறைகளையும் அமைக்க இந்த திட்டம் திட்டமிட்டுள்ளது என்றார். கேரளாவில் 16 காய்கறிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலைகளின் விவரம்: தக்காளி ரூ.8, வெள்ளரி ரூ.8, சாம்பல் பூசணி ரூ.9, முட்டை கோஸ் ரூ.11, மரவள்ளிக்கிழங்கு ரூ.12, அன்னாசி ரூ.15, வெண்டைக்காய் மற்றும் உருளைக் கிழங்கு ரூ.20, கேரட் மாற்றும் பீட் ரூட் ரூ.21,பீன்ஸ் ரூ.28, புடலங்காய், நேந்திரம் மற்றும் பாகற்காய் ரூ.30, சரம் பீன்ஸ் ரூ.34,பூண்டு ரூ.139 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 

Tags : state ,India ,Binarai Vijayan ,Kerala ,False , India, Kerala, vegetable, minimum support, price
× RELATED தேர்தல் பத்திர ரகசிய எண்ணை...