பாட்னா: பீகார் மாநிலத்தில் முதல் கட்டமாக 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மொத்தம் 1,066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று 6 மாவட்டங்களில் உள்ள 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல்கள் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த மொத்தம் 1066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 952 பேர் ஆண் வேட்பாளர்கள், 114 பெண் வேட்பாளர்கள். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் 35 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பாஜ 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 42 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடும் சமீபத்தில் மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி 41 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இக்கட்சிக்கு தற்போது பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையேற்று உள்ளார். கொரோனா நோய் பரவுவதை தவிர்க்கும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுத்திகரித்தல், முகக்கவசம் அணிவது, இதர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தெர்மல் ஸ்கேனர், சானிடைசர், சோப்பு மற்றும் தண்ணீர் உள்ளிட்டவை கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் போலீசாரும், துணை ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.