நாகர்கோவில்: நாகர்கோவிலை அடுத்த பறக்கை இலந்தைவிளை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராமபெருமாள் (43). திமுக மருத்துவரணி துணை அமைப்பாளரான இவர், தனது மருத்துவமனை ஓய்வறையில் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், எனது மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் இலந்தைவிளையை சேர்ந்த விஜயஆனந்த் என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் படித்த சிவராமபெருமாள், இந்தியாவில் பதிவு செய்யவில்லை என்று டிஎஸ்பி பாஸ்கரனிடம், விஜய ஆனந்த் புகார் கூறியதாகவும், அதுபற்றி போனில் அவர் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும், சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் காரில் சென்றபோது அவரையும் மனைவியையும் தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட விரக்தியில் சிவராமபெருமாள் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். டிஎஸ்பி பாஸ்கரன் மீது வழக்குபதிவு செய்தால்தான் உடலை வாங்குவோம் என உறவினர்கள் கூறினர். இந்நிலையில், எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் எஸ்.பி. பத்ரிநாராயணனை சந்தித்து டாக்டர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 2 போலீஸ் அதிகாரிகள் விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதி கூறியதையடுத்து சிவராமபெருமாளின் உடலை பெற்றுக்கொண்டார். இந்நிலையில் டாக்டர் எழுதிய கடிதம் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து இந்த விவகாரத்தில் கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே டாக்டரை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.
* ஐஏஎஸ் ஆகி கேள்வி கேட்கணும் மகளிடம் உருக்கம்
தற்கொலைக்கு முன் சிவராம பெருமாள் தனது நண்பரிடம் பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது. அதில், நான் விஷம் குடித்து விட்டேன். வாட்ஸ் அப், பேஸ்புக்குனு எதெல்லாம் உண்டோ? அதில் எல்லாம் போடு. நான் சாக போகிறேன் என்கிறார். அதற்கு அந்த நண்பர், நான் சொல்வதை கேள். இது பற்றி புகார் எழுதி இருக்கிறேன். அவர்களை சும்மா விட வேண்டாம். நீ தைரியமாக இரு என்கிறார். ஆனால் சிவராம பெருமாள், நான் விஷம் குடிச்சாச்சு என்கிறார். இந்த உரையாடல் நடக்கும் போது சிவராம பெருமாளின், 2 வது மகள் துர்காவும் எதிரில் இருந்துள்ளார். நண்பரிடம் பேசும் போதே, மகளிடம் நீ நல்லா படிக்கணும். அப்பா சாக போறேன். நீ பெரிய ஐ.ஏ.எஸ். ஆகி, போலீஸ்காரங்களை கேள்வி கேட்கணும். இவ்வாறு உரையாடல் முடிகிறது. சிவராம பெருமாள் எழுதிய கடிதத்தின் தொடக்கத்தில் துர்கா சாட்சி என்றும் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.