பப்ஜிக்கு அடிமையான சிறுவன் தற்கொலை

சத்தியமங்கலம்: கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் கந்தவேல் (48). இவரது மனைவி ரமா பிரபா (41). இவர்களுக்கு அருண் (16) என்ற மகன் உள்ளார். கந்தவேல், சென்னை வண்டலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதன்காரணமாக அவர்கள் குடும்பத்துடன் வண்டலூரில் வசித்து வந்தனர். அருண் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். செல்போன் கேம் விளையாட்டிற்கு அடிமையானதால், கடந்த 2019ம் ஆண்டு பள்ளிப்படிப்பை நிறுத்தினார். ஆனால், அருண் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி மனநிலை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டதால், சூலூருக்கு வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டம் கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள தனது நண்பரது பண்ணை வீட்டில் கடந்த 3 மாதங்களாக கந்தவேல் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் கந்தவேல், ரமா பிரபா இருவரும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக புஞ்சைபுளியம்பட்டி சென்றுள்ளனர். சிலமணிநேரத்துக்கு பிறகு இருவரும் வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அருண் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக இருந்தார். இதுகுறித்து, புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: