சென்னை: 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதலை பெற பிரதமர், உள்துறை அமைச்சருக்கோ அரசியல் ரீதியாக எவ்வித அழுத்தமும் கொடுக்க முதல்வர் அஞ்சுவது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைத்திருக்கும் ஆளுநருக்கு, மேலும் தாமதம் செய்யாமல், உடனடியாக அதற்கு ஒப்புதல் அளித்திட உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சருக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதில் “மயான அமைதி” காத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அதற்குச் சற்றும் சளைத்திடாமல் ஆளுநரும் போட்டி அமைதி காக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான திமுக உளப்பூர்வமாகக் கொடுத்த ஒத்துழைப்பைக் கூட நாகரீகம் இன்றி விமர்சனம் செய்யும் முதல்வர், இந்த மசோதாவிற்கு ஒப்புதல் பெறுவதற்குப் பிரதமருக்கோ அல்லது உள்துறை அமைச்சருக்கோ அரசியல் ரீதியாக எவ்வித அழுத்தமும் கொடுக்க ஏனோ அஞ்சுகிறார். கவுன்சிலிங் துவங்கப்பட்டு விட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் கதி என்ன? ஏற்கனவே இரட்டை வேடம் போட்டு, பாஜவுடன் கூட்டணி வைத்து “நீட்” தேர்வை, 2017 முதல் தமிழகத்தில் அனுமதித்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த இட ஒதுக்கீடு மசோதாவையும் முதல்வர் காற்றில் பறக்கவிடப் போகிறாரா? பதவி சுகத்திற்காகவும், ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பித்துப் பாதுகாத்துக் கொள்ளவும், மாணவர்களின் நலனைக் கைகழுவிக் காவு கொடுக்கப் போகிறாரா முதல்வர் பழனிசாமி?. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
கே.ஆர்.நாராயணன் நூற்றாண்டு விழாதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணனின் பிறந்த நாள் நூற்றாண்டு இன்று(நேற்று)! இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், முத்தமிழறிஞர் கலைஞரால் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நாட்டின் பத்தாவது குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றவர். அவரை அழைத்து வந்து, தமிழ்நாட்டில் கழக ஆட்சியில் துவங்கப்பட்ட சட்டப் பல்கலைக் கழகத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக “அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்” எனப் பெயர் சூட்டி, திறந்திடவும் செய்தார் கலைஞர். பிறகு திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சுவடுகள் நிரம்பியிருக்கும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தையும் கே.ஆர்.நாராயணன் தான் திறந்து வைத்தார். கே.ஆர்.நாராயணன் விட்டுச்சென்ற சமூகநீதி தீபத்தை, வீறுகொண்ட விவேகத்துடன் களத்தில் கையில் ஏந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். அவருடைய கனவுகள் நிறைவேற, பாடுபடுவோம். அந்த வெற்றிச் சரித்திரம் மீண்டும் திரும்ப, சபதம் ஏற்போம்.