சிதம்பரம்: சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜவினருக்கும் வி.சி.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், அவரை கைது செய்யக்கோரியும் நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க.வினர் அறிவித்திருந்தனர். இதற்கு போட்டியாக வி.சி.க. சார்பில் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கும் போராட்டத்தை அறிவித்து இருந்தனர். இதனால், 2 தரப்புக்கும் போலீசார் அனுமதி மறுத்தனர். இந்தநிலையில் சிதம்பரம் காந்தி சிலை அருகே பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த இடத்தில் நேற்று காலை ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டது. உடனே, போலீசார், ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்தனர்.