சட்டப்பேரவை தேர்தல் குறித்து திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் குறித்து நேற்று கிழக்கு மண்டல திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மண்டல வாரியாக திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள்  பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.ேக.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடந்தது. அதே நேரத்தில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அதிமுகவின் மக்கள் நலனுக்கு எதிரான சட்டங்கள், மாணவர்களுக்கு எதிராக அதிமுக அரசு செய்து வரும் துரோகங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூறி விளக்க வேண்டும் என்று அப்போது மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தொடர்ந்து மாலை 4 மணியளவில் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் திமுக நிர்வாகிகளின் கருத்துகளை மு.க.ஸ்டாலின் கேட்டார். இன்று காலை 9 மணியளவில் வடக்கு மண்டலத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுடனும், மாலை 4 மணி அளவில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: