நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62 சதவீதமாக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் பேட்டி

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தகவல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இதுவரை 79,46,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1,19,502- பேர் உயிரிழந்த நிலையில் 72,01,070 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் தற்போது 6,25,857 பேர் தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோரின் விகிதம் 90.62 சதவீதமாக அதிகரித்துள்ளது கேரளா, மே. வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. பண்டிகை காலம் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதித்தவர்களில் 49.4% பேர் கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள். நாடு முழுவதும் கடந்த 5 வாரங்களாக நாள்தோறும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைந்துள்ளது எனவும் கூறினார்.

நாட்டில் 3 தடுப்பூசிகள்

இதற்கிடையே நாட்டில் 3 தடுப்பூசிகள் வெவ்வேறு பரிசோதனை கட்டங்களில் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. கோவேக்சின் தடுப்பூசிக்கு 3-ம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை முடிந்த நிலையில் பிரேசில், தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவில் சோதனையில் உள்ளது என கூறியுள்ளது.

Related Stories: