×

மாவீரர்கள் மருதுபாண்டியரைப் போற்றி,அவர்கள் வழியில் சாதி, மதம் பார்க்காமல் நம் தேசத்தையும், மக்களையும் நேசித்திடுவோம் : டிடிவி தினகரன் புகழாரம்

சென்னை : அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் வீரத்திற்கும், எதற்கும் விலைபோகாத விசுவாசத்திற்கும் தனிப்பெரும் அடையாளங்களான  மாவீரர்கள் மருது சகோதரர்கள் மண்ணில் விதைக்கப்பட்ட தினம் இன்று! அவர்கள் இருவரும் இந்த தேசத்தின் மீதும், மக்களின் மீதும் கொண்டிருந்த மாற்றுக்குறையாத பற்றினையும், அதற்காக தங்களின் தலையையே விலையாக கொடுத்த தியாகத்தையும் எண்ணிப்பார்த்தாலே ஒருகணம் உடல் சிலிர்த்துப் போகும்.  

சுயநலமே பெரிதென மருது சகோதரர்கள் நினைத்திருந்தால் நாட்டையும், மக்களையும் ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்து, அவர்களுக்கு கப்பம் கட்டி, கால் பிடித்து  சுகவாழ்வு வாழ்ந்திருக்கலாம். அப்படியோர் ஈன வாழ்வு தேவையில்லை என்று கொள்கைக்காக, கொண்ட லட்சியத்திற்காக கடைசி மூச்சு வரை நெஞ்சு நிமிர்த்தி நின்றதால்தான் மருது சகோதரர்களை  இப்போதும் நாம் கொண்டாடுகிறோம்.

 அவர்களின் நோக்கத்தில், உணர்வில் உண்மை இருந்ததால்தான் சின்ன மருதுவின் ஸ்ரீரங்கம் பிரகடனத்தை 200 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கு படித்தாலும் கூட நம்முடைய நாடி, நரம்புகளில் எல்லாம் சுதந்திர உணர்வு பீறிட்டெழுகிறது; காளையார்கோவில் காளீஸ்வரர் கோயிலில் கம்பீரமாக நிற்கும் அந்த மாவீரர்களின் திருவுருவங்களை நினைத்து  வணங்கத் தோன்றுகிறது.

குருபூஜை நாளில் மருது பாண்டியரைப் போற்றி, அவர்கள் வழியில் சாதி,மதம் பார்க்காமல் நம் தேசத்தையும், மக்களையும் நேசித்திடுவோம். வீரத்தையும், தியாகத்தையும் தூக்கிப்பிடித்து, துரோகத்தை வேரறுத்து, தீயவற்றை வீழ்த்தி வென்று காட்டுவோம்!, எனத் தெரிவித்துள்ளார்.


Tags : heroes ,country , Knights, Maruthupandiyar, DTV Dhinakaran, Praise
× RELATED ஹைபர் லூப் கதையில் 3 ஹீரோ, 3 ஹீரோயின்கள்