தா.பழூர்: தா.பழூரில் உள்ள அபாயகரமான சாலை வளையில் குவிலென்ஸ் கண்ணாடி உடைந்து பயன்பாடின்றி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மிக அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவில் அதிகப்படியாக விபத்துகள் நடந்து வந்தது. மேலும் இந்த சாலையை ஜெயங்கொண்டத்தில் இருந்து கும்பகோணம் செல்லவும், சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லவும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த வளைவில் அதிகளவில் விபத்து நடக்கும். மேலும் அருகில் உள்ள வீடுகளில் வாகனங்களும் புகுந்துள்ளது. இதனால் இந்த வளைவு பகுதியில் விபத்துகளை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குவிலென்ஸ் கண்ணாடி பொருத்தப்பட்டது.
இதனால் அப்பகுதியில் விபத்துகள் வெகுவாக குறைந்தது. மேலும் இரவுநேர விபத்துகள் அதிகளவில் தவிர்க்கப்பட்டது. குவிலென்ஸ் கண்ணாடி காரணமாக இரவு நேரங்களில் வாகனங்களில் ஒளிரக்கூடிய விளக்குகள் மூலமும் எதிர் திசையில் வாகனங்கள் வருவதை தெரிந்து கொண்டு வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்கி விபத்துகளை தவிர்த்து வந்தனர். தற்போது சாலை வளைவில் உள்ள குவிலென்ஸ் கண்ணாடி உடைந்தது மட்டுமின்றி திசை மாறி நிற்கிறது. ஆகையால் வாகன ஓட்டிகள் எதிர் திசையில் வரும் வாகனங்களை சரியான முறையில் கவனிக்க முடியாமல் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே குவிலென்ஸ் கண்ணாடியை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.