சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையோர தடுப்புச்சுவரின் மீது ஜாலியாக நடந்து சென்ற சிறுத்தையால், வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம் - கர்நாடகம் இரு மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. திம்பம் மலைப்பாதையோர வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திம்பம் மலைப்பாதை 26வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்பு சுவர் மீது சிறுத்தை ஒன்று ஜாலியாக நடந்து சென்றது. அப்போது அவ்வழியே சென்ற சரக்கு லாரி ஓட்டுநர் ஒருவர் சிறுத்தை நடமாடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதைத்தொடர்ந்து தனது செல்போனில் சிறுத்தை நடந்து செல்வதை வீடியோ எடுத்தார். தற்போது இந்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடந்து சென்ற சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.