டெல்லி : பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் பணியாளர் மற்றும் பயிற்சி துறையால் கொண்டுவரப்பட்டுள்ள சீர்திருத்தங்களில் சிலவற்றைக் குறித்து மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் நேற்று எடுத்துரைத்தார். அப்போது அரசின் ஆண் பணியாளர்களுக்கும் தற்போது குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படுவதாக கூறினார். ஆனால், குழந்தை பராமரிப்பு விடுமுறை ஒற்றை பெற்றோராக இருக்கும் ஆண் பணியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
குழந்தையை தனி ஒருவராக பராமரிக்கும் மனைவியை இழந்தோர், விவாகரத்து பெற்றவர்கள் உள்ளிட்டவர்களுக்கும், மற்றும் திருமணம் ஆகாதவர்களுக்கும் கூட இந்த விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார். அரசுப் பணியாளர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான மிகப்பெரிய சீர்திருத்தம் என்று இதை வர்ணித்த டாக்டர் ஜிதேந்திர சிங், இதற்கான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் போதுமான அளவு இவை மக்களை சென்றடையவில்லை என்றார்.
பணியாளர் ஒருவர் குழந்தை பராமரிப்பு விடுமுறையில் இருக்கும் போதும் விடுமுறையின் போது பயணம் மேற்கொள்வதற்கான சலுகையை பெற தகுதியுடையவர் ஆவார் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.குழந்தை பேறு விடுமுறை முதல் 365 நாட்களுக்கு 100 சதவீதம் விடுமுறை ஊதியத்துடனும், அடுத்த 365 தினங்களுக்கு 80 சதவீத விடுமுறை ஊதியத்துடனும் வழங்கப்படும் என்றார்.