புதுடெல்லி: ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் மத்தியமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 1999ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தவர் திலீப் ராய். இவர், ஜார்கண்ட் மாநிலத்தில் சிடிஎல் என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை டெல்லி ரோஸ் அவனீவ் மாவட்ட நீதிமன்றம் விசாரித்து, திலீப் ராய் குற்றவாளி என கடந்த 6ம் தேதி அதிரடி தீர்ப்பை வழங்கியது. திலீப் ராயுடன் சேர்த்து மத்திய நிலக்கரித் துறையின் மூத்த அதிகாரிகளாக இருந்த பிரதீப் குமார் பானர்ஜி, உள்ளிட்ட சிலரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த நிலையில், அவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி பாரத் பராசர் நேற்று பிறப்பித்தார். அதில்,‘‘ஊழல் வழக்கில் திலீப் ராய் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இதே வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட மற்றவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்’’ என ஆணைப் பிறப்பித்தார்.