புவனேஸ்வர்: ‘பீகாருக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்’ என மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி விளக்கமளித்துள்ளார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அம்மாநில மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாஜ தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கொரோனா பாதிப்பை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கிடையே, தமிழகம், மத்தியபிரதேசம், அசாம், புதுச்சேரி மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கப்படுவதாக அறிவித்தன. இதனால், மத்திய அரசே கொரோனா தடுப்பூசியை இலவசமாக மக்களுக்கு தருமா, இல்லை பீகார் மக்களுக்கு மட்டுமா என்பதில் குழப்பம் நிலவி வந்தது.