பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் தனியார் விடுதியில் சிலர் சிலைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு கிடைத்த தகவலின்பேரில் ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்திரகுமார் தலைமையில் போலீசார் அந்த லாட்ஜில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு அறையில் பதுங்கியிருந்த ஐந்து பேரில் இருவர் தப்பிய நிலையில் 3 பேர் மட்டும் போலீசாரிடம் பிடிபட்டனர். அந்த அறையில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு அடி உயரமுள்ள 3 ஐம்பொன் சிலைகள் என்று கூறப்படும் நாகலிங்க, ருத்ர சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றி சிலைகள் பதுக்கல் சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த மாடசாமி, கருப்புசாமி, ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த முரளி ஆகியோரை கைது செய்தனர்.