சேலம்: வட மாநிலங்களில் பெய்து வரும் மழையால், 50% லாரிகளுக்கு சரக்குகள் கிடைக்கவில்லை. இதனால் தீபாவளி பண்டிகையில் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ஜவ்வரிசி, ஸ்டார்ச், கைத்தறி ஜவுளி, ஏற்றுமதி ஆடை, அபூர்வா சேலை, அரிசி, முட்டை, நெய், இரும்பு, ஸ்டீல் தகடு கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல், டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, பூண்டு, சீரகம், கொத்தமல்லி, மிளகாய், காஷ்மீர், இமாசல பிரதேசத்தில் இருந்து ஆப்பிள், ஆந்திராவில் சாத்துக்குடி உள்பட பல வகை உணவுப்பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. சில நாட்களாக வட மாநிலங்களில் பெய்து வரும் மழையால், வட மாநிலங்களில் 50 சதவீத லாரிகளுக்கு சரக்குகள் கிடைக்கவில்லை என்றும், இதனால் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.